யாத்திராகமம் 20:1-26

20  பின்பு கடவுள்,+  “எகிப்து தேசத்தில் அடிமைகளாக அடைபட்டிருந்த உங்களை விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய யெகோவா நான்தான்.+  என்னைத் தவிர வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கக் கூடாது.+  மேலே வானத்திலோ கீழே பூமியிலோ பூமியின் கீழ் தண்ணீரிலோ இருக்கிற எதனுடைய வடிவத்திலும் நீங்கள் உருவங்களையும் சிலைகளையும் உங்களுக்காக உண்டாக்கக் கூடாது.+  அவற்றுக்கு முன்னால் தலைவணங்கவோ அவற்றைக் கும்பிடவோ கூடாது.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. நீங்கள் என்னை மட்டும்தான் வணங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.+ தகப்பன்கள் என்னை வெறுத்து எனக்கு எதிராகப் பாவம் செய்தால் அவர்களுடைய பிள்ளைகளை மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டிப்பேன்.  ஆனால், என்னை நேசித்து என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கு+ ஆயிரம் தலைமுறைவரை மாறாத அன்பைக் காட்டுவேன்.  உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதீர்கள்.+ யெகோவாவின் பெயரை வீணாகப் பயன்படுத்துகிறவர்களை அவர் தண்டிக்காமல் விட மாட்டார்.+  ஓய்வுநாளைப் புனித நாளாக+ அனுசரிக்க மறந்துவிடாதீர்கள்.  உங்களுடைய எல்லா வேலைகளையும் ஆறு நாட்களுக்குச் செய்யுங்கள்.+ 10  ஆனால், ஏழாம் நாள் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கான ஓய்வுநாள். அன்றைக்கு நீங்களோ, உங்கள் மகனோ மகளோ, உங்களிடம் அடிமையாக இருக்கிற ஆணோ பெண்ணோ, உங்கள் ஊர்களில் குடியிருக்கிற வேறு தேசத்துக்காரனோ, உங்கள் மிருகமோ எந்த வேலையும் செய்யக் கூடாது.+ 11  ஏனென்றால், யெகோவா வானத்தையும் பூமியையும் கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் ஆறு நாட்களில் உண்டாக்கி, ஏழாம் நாளில் ஓய்வெடுக்கத் தொடங்கினார்.+ அதனால்தான், யெகோவா ஓய்வுநாளை ஆசீர்வதித்து அதைப் புனிதமாக்கினார். 12  உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்.+ அப்போதுதான், உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்தில் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள்.+ 13  நீங்கள் கொலை செய்யக் கூடாது.+ 14  உங்களுடைய மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது.+ 15  நீங்கள் திருடக் கூடாது.+ 16  நீங்கள் அடுத்தவனுக்கு விரோதமாகப் பொய் சாட்சி சொல்லக் கூடாது.+ 17  நீங்கள் அடுத்தவனுடைய வீட்டின் மேல் ஆசைப்படக் கூடாது. அவனுடைய மனைவியையும், அடிமையையும்,* காளையையும், கழுதையையும், அவனுக்குச் சொந்தமான வேறு எதையும் அடையத் துடிக்கக் கூடாது”+ என்றார். 18  அப்போது, ஜனங்கள் எல்லாரும் இடிமுழக்கத்தைக் கேட்டார்கள், மின்னல் வெட்டுவதைப் பார்த்தார்கள், ஊதுகொம்பின் சத்தத்தைக் கேட்டார்கள், மலையிலிருந்து புகை எழும்புவதைப் பார்த்தார்கள். அதனால் நடுநடுங்கிப் போய், தூரத்தில் நின்றுகொண்டார்கள்.+ 19  பின்பு மோசேயிடம், “நீங்கள் எங்களிடம் பேசுங்கள், நாங்கள் கேட்கிறோம். ஆனால் கடவுள் எங்களிடம் பேச வேண்டாம், அவர் பேசினால் செத்துவிடுவோமோ என்று பயமாக இருக்கிறது”+ என்றார்கள். 20  அதனால் மோசே ஜனங்களிடம், “பயப்படாதீர்கள், உங்களைச் சோதித்துப் பார்க்கத்தான் உண்மைக் கடவுள் வந்திருக்கிறார்.+ நீங்கள் எப்போதும் அவருக்குப் பயந்து நடந்து, பாவம் செய்யாமல் இருக்க வேண்டும் என்றுதான் அவர் விரும்புகிறார்”+ என்றார். 21  அப்போது, ஜனங்கள் தூரத்திலேயே நின்றுகொண்டிருந்தார்கள். ஆனால் மோசே, உண்மைக் கடவுள் இருந்த கார்மேகத்துக்குப் பக்கத்தில் போனார்.+ 22  அப்போது யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரவேலர்களிடம் இப்படிச் சொல்: ‘நான் பரலோகத்திலிருந்து உங்களிடம் பேசியதை உங்கள் கண்களாலேயே பார்த்தீர்கள்.+ 23  என்னைத் தவிர உங்களுக்கு வேறே தெய்வம் இருக்கக் கூடாது. அதனால், வெள்ளியிலோ தங்கத்திலோ உங்களுக்காகத் தெய்வங்களை உண்டாக்காதீர்கள்.+ 24  எனக்காக மண்ணினால் ஒரு பலிபீடத்தைச் செய்யுங்கள். அதன்மேல் உங்கள் ஆடுமாடுகளைத் தகன பலிகளாகவும் சமாதான* பலிகளாகவும் செலுத்துங்கள். நான் தேர்ந்தெடுக்கிற எல்லா இடங்களிலும் இப்படிச் செய்யுங்கள். அப்போது, என்னுடைய பெயரை எல்லாரும் அங்கே நினைத்துப் பார்ப்பார்கள்.+ நானும் அங்கே வந்து உங்களை ஆசீர்வதிப்பேன். 25  நீங்கள் கற்களால் எனக்குப் பலிபீடம் கட்டும்போது, உளிகளால் செதுக்கிய கற்களை வைத்துக் கட்டக் கூடாது.+ கற்களின் மேல் உளி பட்டால் அவை தீட்டுப்பட்டுவிடும். 26  என்னுடைய பலிபீடத்தின் மேல் நீங்கள் ஏறிப்போகும்போது உங்கள் அந்தரங்க உறுப்புகள் தெரியக் கூடாது; அதனால், அதற்குப் படிக்கட்டுகள் வைக்காதீர்கள்’” என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “ஆண் அடிமையையும், பெண் அடிமையையும்.”
வே.வா., “நல்லுறவு.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா