லூக்கா எழுதியது 15:1-32
அடிக்குறிப்புகள்
ஆராய்ச்சிக் குறிப்புகள்
மீடியா
மேய்ப்பரின் வாழ்க்கை சுலபமாக இருக்கவில்லை. வெயிலிலும் குளிரிலும் அவர் பாடுபட்டார்; ராத்திரி தூங்காமல் ஆடுகளைப் பார்த்துக்கொண்டார். (ஆதி 31:40; லூ 2:8) சிங்கம், ஓநாய், கரடி போன்ற கொடிய மிருகங்களிடமிருந்தும் திருடர்களிடமிருந்தும் மந்தையைப் பாதுகாத்தார். (ஆதி 31:39; 1சா 17:34-36; ஏசா 31:4; ஆமோ 3:12; யோவா 10:10-12) மேய்ப்பர் தன்னுடைய ஆடுகள் சிதறிப்போகாதபடி பார்த்துக்கொண்டார் (1ரா 22:17), தொலைந்துபோன ஆடுகளைத் தேடிக் கண்டுபிடித்தார் (லூ 15:4), மெலிந்த அல்லது தளர்ந்துபோன ஆட்டுக்குட்டிகளைத் தன் நெஞ்சில் (ஏசா 40:11) அல்லது தோள்களில் சுமந்தார், நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளையும் காயமடைந்த ஆடுகளையும் கவனித்துக்கொண்டார் (எசே 34:3, 4; சக 11:16). பைபிள் அடிக்கடி மேய்ப்பர்களையும் அவர்களுடைய வேலையையும் அடையாள அர்த்தத்தில் குறிப்பிடுகிறது. உதாரணத்துக்கு, யெகோவா ஒரு மேய்ப்பரைப் போல, தன் ஆடுகளாகிய மக்களை அன்போடு கவனித்துக்கொள்வதாக அது சொல்கிறது. (சங் 23:1-6; 80:1; எரே 31:10; எசே 34:11-16; 1பே 2:25) பைபிள் இயேசுவை ‘பெரிய மேய்ப்பர்’ (எபி 13:20) என்றும், “முதன்மை மேய்ப்பர்” என்றும் அழைக்கிறது. அவருடைய வழிநடத்துதலின்படி கிறிஸ்தவச் சபையில் இருக்கும் கண்காணிகள் கடவுளுடைய மந்தையை மனப்பூர்வமாகவும் ஆர்வமாகவும் சுயநலமில்லாமலும் மேய்க்கிறார்கள்.—1பே 5:2-4.