Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் துல்லியமானதா?

பைபிள் துல்லியமானதா?

அறிவியல்

பைபிள் ஓர் அறிவியல் புத்தகம் அல்ல. இருந்தாலும், அறிவியலைப் பற்றி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பைபிள் சொல்லியிருக்கிறது. சில உதாரணங்களைக் கவனியுங்கள்.

இந்தப் பிரபஞ்சத்துக்கு ஓர் ஆரம்பம் இருந்ததா?

இதற்கான பதில் ‘இல்லை’ என்பதாக முன்னணியில் இருக்கிற விஞ்ஞானிகள் ஒரு காலத்தில் நினைத்தார்கள். ஆனால் இப்போது, இந்தப் பிரபஞ்சத்துக்கு ஓர் ஆரம்பம் இருப்பதாக அவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். இதைப் பற்றி பைபிள் முன்கூட்டியே தெளிவாகச் சொல்லியிருக்கிறது.—ஆதியாகமம் 1:1.

பூமியின் வடிவம் என்ன?

பூர்வ காலங்களில், பூமி தட்டையாக இருப்பதாக நிறைய பேர் நினைத்தார்கள். கி.மு. 5-ஆம் நூற்றாண்டில், பூமி வட்ட வடிவில் இருப்பதாக கிரேக்க விஞ்ஞானிகள் சொன்னார்கள். ஆனால், அதற்கு வெகு காலத்துக்கு முன்பே, கி.மு. 8-ஆம் நூற்றாண்டில், பைபிள் எழுத்தாளரான ஏசாயா ‘உருண்டையான பூமியை’ பற்றி குறிப்பிட்டார். உருண்டை என்ற வார்த்தையை ‘வட்டம்’ என்றும் சொல்லலாம்.—ஏசாயா 40:22; அடிக்குறிப்பு.

காலம் செல்ல செல்ல வானம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடுமா?

கி.மு. 4-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க விஞ்ஞானியான அரிஸ்டாட்டில், பூமி மட்டுமே கொஞ்சம் கொஞ்சமாக அழியும் என்றும், வானம் மாறாது, கொஞ்சம் கொஞ்சமாக அழியாது என்றும் சொன்னார். இந்தக் கருத்து பல நூற்றாண்டுகளாக இருந்துவந்தது. ஆனால், 19-ஆம் நூற்றாண்டில், என்ட்ரோபி (Entropy) என்ற கருத்தைப் பற்றி விஞ்ஞானிகள் சொன்னார்கள். என்ட்ரோபி என்பது வானத்திலும் பூமியிலும் இருக்கிற எல்லா பொருளும் (matter) கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடுவதைக் குறிக்கிறது. இந்தக் கருத்தைப் பிரபலப்படுத்த முயற்சி செய்த விஞ்ஞானிகளில் லார்ட் கெல்வின் (வில்லியம் தாம்ஸன்) என்பவரும் ஒருவர்! வானத்தைப் பற்றி பைபிள் சொல்லும் ஒரு விஷயத்தை அவர் குறிப்பிட்டார். “அவையெல்லாம் துணி போல நைந்துபோகும்” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 102:25, 26) ஆனால், பைபிளில் சொல்லியிருக்கிறபடி, தன்னுடைய படைப்புகள் அழிந்துவிடாதபடி கடவுளால் அவற்றைக் பாதுகாக்க முடியும் என்று கெல்வின் நம்பினார்.—பிரசங்கி 1:4.

பூமியையும் மற்ற கோள்களையும் எது தாங்கி பிடித்திருக்கிறது?

விண்வெளியில் உள்ள நட்சத்திரங்களும் கோள்களும் பளிங்கு போல இருக்கிற கோளங்களில் பொருத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொரு கோளமும் இன்னொரு கோளத்துக்குள் பொருத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், அந்தக் கோளங்களின் நடுவில் பூமி இருப்பதாகவும் அரிஸ்டாட்டில் கற்பித்தார். ஆனால், கி.பி. 18-ஆம் நூற்றாண்டில், நட்சத்திரங்களும் கோள்களும் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கலாம் என்ற கருத்தை விஞ்ஞானிகள் ஒத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். ஆனால், கி.மு. 15-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட யோபு புத்தகத்தில், படைப்பாளர் “பூமியை அந்தரத்தில் தொங்கவிட்டார்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.—யோபு 26:7.

மருத்துவம்

பைபிள் ஒரு மருத்துவ புத்தகம் அல்ல. இருந்தாலும், உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான சில ஆலோசனைகள் அதில் இருக்கின்றன.

நோயாளிகளைப் பிரித்துவைப்பது.

தொழுநோயாளிகளை மற்றவர்களிடமிருந்து பிரித்துவைக்க வேண்டும் என்று மோசேயின் திருச்சட்டம் குறிப்பிட்டது. ஆனால், சுமார் 700 வருஷங்களுக்கு முன்பு, கொடிய நோய்கள் மக்களைத் தாக்கிய பிறகுதான், மருத்துவர்கள் இந்த ஆலோசனையைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள். இந்த ஆலோசனை இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.—லேவியராகமம் அதிகாரங்கள் 13, 14.

பிணத்தைத் தொட்ட பிறகு கைகளைக் கழுவுவது.

19-ஆம் நூற்றாண்டின் கடைசிவரை, மருத்துவர்கள் பிணங்களைத் தொட்ட பிறகு, கைகளைக் கழுவாமலேயே நோயாளிகளுக்குச் சிகிச்சை கொடுத்தார்கள். அதனால், நிறைய பேர் இறந்துபோனார்கள். ஆனால், பிணத்தைத் தொட்ட யாரும் தீட்டுள்ளவனாக இருப்பதாக மோசேயின் திருச்சட்டம் சொன்னது. சுத்திகரிப்பதற்குத் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அது சொன்னது. இப்படிப்பட்ட பழக்கங்கள், உடல் ஆரோக்கியத்தைக் காத்தன.—எண்ணாகமம் 19:11, 19.

கழிவுகளை அகற்றுவது.

ஒவ்வொரு வருஷமும், வயிற்றுப்போக்கால் பத்து லட்சத்துக்கும் அதிகமான பிள்ளைகள் இறந்துபோகிறார்கள். மனித கழிவுகளைச் சரியாக அகற்றாததுதான் இதற்குக் காரணம். மனிதர்கள் குடியிருந்த இடத்திலிருந்து தொலைதூரத்தில் மனிதக் கழிவுகள் புதைக்கப்பட வேண்டும் என்று மோசேயின் திருச்சட்டம் சொன்னது.—உபாகமம் 23:13.

விருத்தசேதனம் செய்யப்படும் நாள்.

ஆண் குழந்தை பிறந்த எட்டாவது நாளில் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும் என்று கடவுளுடைய சட்டம் சொன்னது. (லேவியராகமம் 12:3) குழந்தை பிறந்த ஒரு வாரத்துக்குப் பிறகுதான் இரத்தத்துக்கு உறையும் தன்மை கிடைக்கிறது. பைபிள் காலங்களில், நவீன மருத்துவ சிகிச்சைகள் இல்லாதபோது, குழந்தை பிறந்த ஒரு வாரத்துக்குப் பிறகு விருத்தசேதனம் செய்தது ஒரு ஞானமான செயலாக இருந்தது.

உணர்ச்சியும் உடல் ஆரோக்கியமும்.

சந்தோஷம், நம்பிக்கை, நன்றியுணர்வு, மன்னிக்க தயாராக இருப்பது ஆகியவை உடல் ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ள உதவியாக இருக்கும் என்பதாக மருத்துவ ஆய்வாளர்களும் விஞ்ஞானிகளும் சொல்கிறார்கள். “சந்தோஷமான உள்ளம் அருமையான மருந்து. ஆனால், உடைந்த உள்ளம் ஒருவருடைய பலத்தை உறிஞ்சிவிடும்” என்று பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 17:22.