Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகம் ஏன் வெறுப்பால் நிறைந்திருக்கிறது?

உலகம் ஏன் வெறுப்பால் நிறைந்திருக்கிறது?

உலகத்தில் ஏன் வெறுப்பு இந்தளவுக்குக் கொட்டிக்கிடக்கிறது? இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்ள, வேறுசில கேள்விகளுக்கும் பதில் தெரிந்துகொள்ள வேண்டும். அவை: வெறுப்பு என்றால் என்ன? மக்கள் ஏன் மற்றவர்களை வெறுக்கிறார்கள்? வெறுப்பு எப்படி பரவுகிறது?

வெறுப்பு என்றால் என்ன?

வெறுப்பு என்பது ஒரு நபர்மேல் அல்லது ஒரு தொகுதியைச் சேர்ந்தவர்கள்மேல் பகையை வளர்த்துக்கொள்வதைக் குறிக்கிறது. இது, ஏதோ கொஞ்ச நேரத்துக்கு ஏற்படும் ஒரு உணர்வு கிடையாது. காலங்காலமாக மனதுக்குள்ளேயே இருக்கும் ஒரு கோப வெறி!

மக்கள் ஏன் மற்றவர்களை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள்?

அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. ஒரு நபர் எந்தத் தவறும் செய்யாவிட்டால்கூட மக்களுடைய வெறுப்புக்கு ஆளாகலாம். அவர் யார்... எந்தப் பின்னணியைச் சேர்ந்தவர்... என்பதைப் பொறுத்து மக்கள் அவரை வெறுக்கலாம். ஒரு குறிப்பிட்ட தொகுதியைச் சேர்ந்தவர்கள் மோசமானவர்கள், ஆபத்தானவர்கள், அவர்கள் மாறவே மாட்டார்கள் என்ற எண்ணத்தால் மக்கள் அவர்களை வெறுக்கலாம். அவர்கள் ரொம்ப தாழ்வானவர்கள் என்றும் அவர்களால் நிறைய பிரச்சினைகள்தான் வரும் என்றும் நினைக்கலாம். இல்லையென்றால், வெறுப்பை காட்டும் ஒரு நபர் வன்முறைக்கு ஆளாகி இருக்கலாம், அநியாயமாக நடத்தப்பட்டிருக்கலாம். அல்லது, வாழ்க்கையில் சில கசப்பான விஷயங்களை அனுபவித்திருக்கலாம்.

வெறுப்பு எப்படி பரவுகிறது?

ஒரு நபர் இன்னொரு நபரை பார்க்காமலேயே அவர்மேல் வெறுப்பை வளர்த்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எப்படி? தான் நேசிக்கிற அல்லது உயர்வாக நினைக்கிற ஒருவர், ஒரு குறிப்பிட்ட நபரை அல்லது ஒரு தொகுதியை வெறுக்கலாம். அவரோடு பழகுவதால் இவருக்கே தெரியாமல் அந்த எண்ணங்கள் இவருக்கும் ஒட்டிக்கொள்ளலாம். இப்படித்தான், வெறுப்பு ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு அல்லது ஒரு சமுதாயத்துக்கே பரவிவிடுகிறது.

வெறுப்பு இப்படி வேகமாகப் பரவுவதால்தான் உலகம் முழுவதிலும் நிறைந்திருக்கிறது. ஆனால், வெறுப்பு என்ற சங்கிலியை உடைத்து எறிய, அதன் ஆணிவேரை தெரிந்துகொள்ள வேண்டும். அதைப் பற்றி பைபிள் சொல்லுகிறது.

வெறுப்பின் ஆணிவேர்

வெறுப்பு மனிதர்களிடம் ஆரம்பிக்கவில்லை. பரலோகத்தில் இருந்த ஒரு தூதன் கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்தபோது இது ஆரம்பித்தது. அவனை பிசாசாகிய சாத்தான் என்று பைபிள் சொல்கிறது. “ஆரம்பத்திலிருந்தே அவன் ஒரு கொலைகாரனாக இருக்கிறான்”. அதுமட்டுமல்ல, “அவன் பொய்யனும் பொய்க்குத் தகப்பனுமாக இருக்கிறான்.” அன்றுமுதல் இன்றுவரை அவன் வெறுப்பையும் வெறித்தனத்தையும் கிளப்பிவிடுகிறான். (யோவான் 8:44; 1 யோவான் 3:11, 12) உண்மையை சொல்ல வேண்டும் என்றால், அவனே ரொம்ப கொடூரமான, வெறித்தனமான ஒரு ஆள்தான்!—யோபு 2:7; வெளிப்படுத்துதல் 12:9, 12, 17.

வெறுப்பு மனிதர்களின் இரத்தத்தில் ஊறிப்போயிருக்கிறது. முதல் மனிதன் ஆதாம், சாத்தானை மாதிரியே நடந்துகொண்டான். அதனால், அவனுடைய வம்சத்தில் வந்த எல்லா மனிதர்களும் பாவிகளாக ஆகிவிட்டார்கள். தவறு செய்கிற தன்மையும் அவர்களுக்கு வந்துவிட்டது. (ரோமர் 5:12) அவர்களுடைய முதல் மகன் காயீன், வெறுப்பினால் தன்னுடைய சொந்த தம்பி ஆபேலை படுகொலை செய்தான். (1 யோவான் 3:12) மனிதர்களால் அன்போடும் கரிசனையோடும் நடந்துகொள்ள முடியும் என்பது உண்மைதான்! இருந்தாலும், தவறு செய்கிற தன்மை நமக்குள் இருப்பதால் நாம் சுயநலமாக நடந்துகொள்கிறோம். வயிற்றெரிச்சல் படுகிறோம், தலைக்கனத்தோடு நடந்துகொள்கிறோம். இந்தக் குணங்கள் வெறுப்புக்குக் காரணமாக இருக்கின்றன.—2 தீமோத்தேயு 3:1-5.

பொறுத்துப் போக வேண்டும் என்ற எண்ணம் மனிதர்களிடம் இல்லை. இன்று மக்கள் இரக்கம் இல்லாமல் நடந்துகொள்கிறார்கள். எதற்கெடுத்தாலும் அடிதடி சண்டையில் இறங்குகிறார்கள். அதனால்தான் எங்கு பார்த்தாலும் வெறுப்பு இருக்கிறது. அதுமட்டுமல்ல, ‘இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கட்டுப்பாட்டில் இருப்பதால்’ பொறுத்துப் போகாத குணம், தப்பெண்ணம், அவமானப்படுத்தும் பேச்சு, கலவரம், மற்றவர்களை வம்பு பண்ணுவது ஆகியவை ரொம்பவே அதிகமாக இருக்கிறது.—1 யோவான் 5:19.

வெறுப்பின் ஆணிவேரைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று இவ்வளவு நேரம் பார்த்தோம். ஆனால், இதைப் பற்றி மட்டுமே பைபிள் சொல்வதில்லை. இதற்கெல்லாம் என்ன தீர்வு என்றும் சொல்கிறது.