Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 5

சொந்தங்களோடு சமாதானமாக இருப்பது எப்படி?

சொந்தங்களோடு சமாதானமாக இருப்பது எப்படி?

“கரிசனையையும் . . . மனத்தாழ்மையையும் சாந்தத்தையும் நீடிய பொறுமையையும் காட்டுங்கள்.”—கொலோசெயர் 3:12

கல்யாணத்திற்கு பின் நீங்களும் உங்கள் துணையும் தனி குடும்பமாக ஆகிவிடுகிறீர்கள். பெற்றோர்மீது உங்களுக்கு இருக்கும் அன்பும் மதிப்பும் குறையப்போவதில்லை. இருந்தாலும் துணைதான் இனி உங்கள் உலகம்! இந்த உண்மையை ஏற்றுக்கொள்வது உங்கள் பெற்றோருக்குச் சிலசமயம் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், பைபிள் ஆலோசனைகளின்படி நடந்தால் அவர்களோடும் சமாதானமாக இருக்க முடியும், உங்கள் துணையையும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியும்.

1 பெற்றோருக்கு மதிப்பு கொடுங்கள்

பைபிள் என்ன சொல்கிறது? “உன் தகப்பனுக்கும் உன் தாய்க்கும் மதிப்புக் கொடு.” (எபேசியர் 6:2) உங்களுக்கு எவ்வளவு வயதானாலும் சரி உங்கள் அப்பா அம்மாவுக்கு மரியாதை கொடுங்கள்; அவர்களை எப்போதும் அன்பாகக் கவனித்துக்கொள்ளுங்கள். உங்கள் துணைக்கும், தன் பெற்றோரைக் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். “அன்பு பொறாமைப்படாது” என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 13:4) அதனால், உங்கள் கணவர் (அல்லது மனைவி) தன் அப்பா அம்மாவிடம் பாசம் காட்டுவதைப் பார்த்துப் பொறாமைப்படாதீர்கள்.—கலாத்தியர் 5:26.

நீங்கள் என்ன செய்யலாம்?

  • “உங்க அப்பா அம்மா எப்போ பாத்தாலும் என்னை மட்டம் தட்டிக்கிட்டே இருக்காங்க” அல்லது “உங்க அம்மா எதுக்கெடுத்தாலும் என்னை குறை சொல்லிட்டே இருக்காங்க” என்றெல்லாம் சொல்லாதீர்கள்

  • உங்கள் கணவரை (அல்லது மனைவியை) புரிந்துகொள்ளுங்கள். அவருடைய இடத்தில் உங்களை வைத்துப் பாருங்கள்

2 கனிவாக, அதேசமயத்தில் உறுதியாக இருங்கள்

பைபிள் என்ன சொல்கிறது? “புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.” (ஆதியாகமம் 2:24) உங்களுக்குக் கல்யாணமான பிறகும் உங்களைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இன்னும் இருப்பதாக பெற்றோர் நினைக்கலாம். அதனால், உங்கள் குடும்ப விஷயங்களில் அவர்கள் அளவுக்குமீறி தலையிடலாம்.

அவர்கள் எந்தளவு தலையிடலாம் என்பதைப் பற்றி நீங்கள் இருவர்தான் முடிவு செய்ய வேண்டும். அதைப் பற்றி அவர்களிடம் அன்பாக, கனிவாகப் பேசுங்கள்; அதேசமயம் உள்ளதை உள்ளபடி சொல்லுங்கள். (நீதிமொழிகள் 15:1) மனத்தாழ்மையோடும் பொறுமையோடும் நடந்துகொண்டால் உங்கள் சொந்தங்களோடு சமாதானமாக இருக்கலாம். ‘அன்பினால் ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளலாம்.’—எபேசியர் 4:2.

நீங்கள் என்ன செய்யலாம்?

  • சொந்தங்கள் உங்கள் வாழ்க்கையில் அதிகமாக தலையிட்டால், பொருத்தமான சமயத்தில் அதைப் பற்றி உங்கள் கணவரிடம் (அல்லது மனைவியிடம்) பேசுங்கள்

  • அதை எப்படிச் சரிசெய்யலாம் என்று இருவரும் பேசி முடிவெடுங்கள்